பாஜக சார்பில் ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற பேரணியின்போது அக்கட்சியின் மூத்த தலைவர் லால் சிங்கின் சகோதரர், மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தியை தரம்தாழ்ந்த வகையில் பேசியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இதுதொடர்பான விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும், பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான லால் சிங் தலைமையில் அக்கட்சியினர் பேரணி நடத்தினர்.
அப்போது, அவரது இளைய சகோதரர் செüத்ரி ரவீந்தர் சிங் வாகனம் ஒன்றின் மீது ஏறி நின்று மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தியை தரம் தாழ்ந்த சொற்களால் திட்டியதாகத் தெரிகிறது. இதற்கு அருகில் இருந்தவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பினர்.
இதுதொடர்பான விடியோ பதிவு தற்போது வேகமாகப் பரவி வருகிறது. பாஜக தலைவரின் சகோதரரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.