ரோட்டோமாக் உரிமையாளர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ரோட்டோமாக் நிறுவனம் பரோடா வங்கியில் ரூ.456.63 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அந்த நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் 

ரோட்டோமாக் நிறுவனம் பரோடா வங்கியில் ரூ.456.63 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அந்த நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சிபிஐ திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகை தாக்கலை பதிவு செய்துகொண்ட சிபிஐ சிறப்பு நீதிபதி எம்.பி.செளதரி, அதன் மீதான விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ரோட்டோமாக் நிறுவனம் மொத்தமாக 7 வங்கிகளின் கூட்டமைப்பில் ரூ.3,690 கோடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், பரோடா வங்கியில் ரூ.456 கோடி மோசடி செய்தது தொடர்பாக மட்டும் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 3 மாத விசாரணைக்குப் பிறகு இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கடன் தொகை தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
இந்த குற்றப்பத்திரிகையில், ரோட்டோமாக் நிறுவனம் மட்டுமல்லாது, அதன் தலைமை நிர்வாக இயக்குநர் விக்ரம் கோத்தாரி, அவரது மகனும், நிறுவன இயக்குநருமான ராகுல் கோத்தாரி, பரோடா வங்கியின் அப்போதைய உதவி மேலாளர் எஸ்.கே.உபாத்யாய், மூத்த மேலாளர் ஓம் பிரகாஷ் கபூர், மேலாளர் ஷாஷி பிஷ்வாஸ் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் மீது, ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com