கர்நாடகத்தில் மதச்சார்பற்ற மாநிலத் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சி.டி. ரவி கூறியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். தேர்தலில் காங்கிரஸின் பலம் 122-லிருந்து 78-ஆக குறைந்து விட்டது. இதேபோல், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையும் 40-லிருந்து 38-ஆக சரிந்து விட்டது.
இந்நிலையில், மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸூம், மதச்சார்பற்ற ஜனதா தளமும் செயல்படுகின்றன. புனிதமில்லாத கூட்டணியை அக்கட்சிகள் ஏற்படுத்தியுள்ளன.
எனவே, கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியில் இருந்து விலகியிருக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதற்குப் பதிலாக, புதன்கிழமையை மக்கள் தீர்ப்பு விரோத நாளாக அனுசரிக்க பாஜக தீர்மானித்துள்ளது.
புதிய அரசு பதவியேற்பு நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக, காந்திநகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே பாஜக நடத்தும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்வார்கள். இதில் பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.டி. குமாரசாமி, சோபா, என். ரவிகுமார், கட்சியின் எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேபோல், மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது என்று
சி.டி. ரவி கூறினார்.