நிபா வைரஸ்: கேரளத்தில் 10 பேர் பலி

நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளத்தில் சிகிச்சை பெற்று வந்த இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளத்தில் சிகிச்சை பெற்று வந்த இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து அந்நோயின் தாக்கத்தால் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் பலியானோரின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரளத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸானது, அந்த மாநிலத்தை மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. அண்மையில் கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அவர்களில் 12 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியானது. அவர்களில் செவிலியர் ஒருவரும் அடக்கம்.
இந்த நிலையில், வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அவை பலனின்றி அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜன், அசோகன் ஆகிய இருவரும் வைரஸ் பாதிப்பின் தீவிரம் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். இதை கேரள அரசு உறுதிபடுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிபா வைரஸ் பாதிப்பால் கேரளத்தில் 10 பேர் பேர் உயிரிழந்து விட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் வேறு எவருக்கும் இந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் இல்லை. 
இருப்பினும் கேரளம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான நிலவரங்கள் அனைத்தும் உலக சுகாதார மையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத் தறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் பேசினேன். அவர், தற்போது ஜெனீவாவில் உள்ளார். இருந்தபோதிலும், கேரளத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றார் கே.கே.ஷைலஜா.
இதனிடையே, நிலைமையை நேரடியாக ஆய்வு செய்வதற்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு கேரளம் விரைந்துள்ளது. அவர்களைத் தவிர மத்திய சுகாதாரத் துறை சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கேரளம் சென்றுள்ளனர்.
கோவா அரசு: இதற்கு நடுவே, நிபா வைரஸ் பாதிப்பு குறித்து கோவா மக்கள் எவரும் பீதியடையத் தேவையில்லை என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் கேரளத்தில்தான் அதிக அளவில் இருப்பதாகவும், கோவாவில் அச்சப்படும் அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளது.
மத்திய அமைச்சர் விளக்கம்: நிபா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; தேவையான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com