கர்நாடக முதல்வராக குமாரசாமி நேற்று (புதன்கிழமை) பதவியேற்றார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் மக்களவை தேர்தலை மனதில் கொண்டு எதிர்க்கட்சிகளின் பலத்தை காண்பிக்க மற்ற மாநில முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதையேற்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சிபிஎம் தலைவர் சீத்தராம் யெச்சூரி, சிபிஐ தலைவர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ஐக்கிய ஜனதா தள (சரத்யாதவ் அணி) தலைவர் சரத்யாதவ், ராஷ்டிரிய லோக் தள் தலைவர் அஜித்சிங், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
ஆனால், இந்த விழாவில் வருவதற்கு முன்பாக கர்நாடக டிராபிக் மம்தா பானர்ஜியை வெறுப்பில் ஆழ்த்தியது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி விதான் சௌதாவுக்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அவர் வந்துகொண்டிருந்த பாதை டிராபிக்கால் முடங்கியது. அதனால், அவர் விதான் சௌதா வளாகத்துக்கு சிறிது தூரம் நடக்க நேர்ந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் மம்தா பானர்ஜியை கோபத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து, மம்தா பானர்ஜி விதான் சௌதா வளாகத்தில் நுழையும் விடியோ காட்சியில், தான் நடந்து வந்ததற்கான கண்டனத்தை கர்நாடக காவல்துறை இயக்குநரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. அதோடு, அவர் அங்கிருந்த தேவே கௌடா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடமும் இதனை எடுத்துரைத்தார்.
இந்த சம்பவத்தால் குமாரசாமி பதவியேற்பு விழாவில் மம்தா சற்று நேரம் கோபமாகவே தென்பட்டார்.
அதன்பிறகு, அவர் இயல்பான நிலைக்கு மாறி மேடையில் இருந்தவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.