ஒடிஸா மாநிலத்தில் புதன்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதிதாக மேகமூட்டம் உருவாகியுள்ளதாகவும், ஒடிஸா - மேற்கு வங்க எல்லையை நோக்கி அது நகர்ந்து வருவதால் புவனேசுவாம், கட்டாக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
ஒடிஸாவில் புதன்கிழமை காலை 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் நான்கு மணி நேரத்துக்கு கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
சாலைகள் தண்ணீரில் மூழ்கியதால் புவனேசுவரம், கட்டாக் மற்றும் புரி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல், தண்டவாளங்களும் தண்ணீரில் மூழ்கியதால் ஏறத்தாழ 10 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன், ரயில்களை இயக்கப் பயன்படும் மின்சார கம்பிகளும் சில இடங்களில் அறுந்து விழுந்தன. அவ்வாறு சேதமடைந்த மின்கம்பிகளை சீர் செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.