ராஜஸ்தானில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறந்த நிர்வாகம் குறித்து பிரதமர் மோடி பேச்சுகளை தொகுத்து எழுதப்பட்ட புத்தகத்தை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சிறந்த நிர்வாகம், ஆட்சி முறை குறித்து அவரது பேச்சுகள் தொகுத்து புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்போது, ராஜஸ்தான் அரசு தங்கள் மாநில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக அந்த புத்தகத்தை குஜராத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் வாங்கியுள்ளது.
அரசு முறைப்படி அனுமதி அளித்த பிறகு இந்தப் புத்தகங்கள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என்று மாநில பணியாளர் நலத்துறை செயலாளர் கூறியுள்ளார். சிறந்த நிர்வாகம் மட்டுமின்றி, விரைவில் சரியான முடிவு எடுப்பது, நேர மேலாண்மை குறித்த மோடியின் கருத்துகளும் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
அரசின் முதல்நிலையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடியின் கருத்து அடங்கிய புத்தகங்களை வழங்குவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரித்துள்ளன. படித்து உயர்நிலையை எட்டியுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை குறைத்து மதிப்பிடும் செயல் இது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.