ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நதா டாப்பில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகளும், ஹெலிகாப்டர் குழுவினரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
ஜம்முவில் இருந்து வழக்கம்போல் நதா டாப் பகுதிக்கு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் புதன்கிழமை புறப்பட்டது. சுமார் 9.50 மணியளவில் அந்தப் பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அப்போது, எதிர்பாராதவிதமாக தரையில் மோதி ஹெலிகாப்டர் சேதமடைந்தது. இதையடுத்து, அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் இருந்த 2 பயணிகள் உள்பட 6 பேர் தரை இறங்கினர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.