முசாபர்நகர்: தான் தூங்கும் பொழுது பாம்பு கடித்தது தெரியாமல் அழுத குழந்தைக்கு பாலூட்டியதால் தாயும், குழந்தையும் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் மண்டலா கிராமத்தில் இந்த பரிதாபம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் அவரது இரண்டரை வயது குழந்தையுடன் வியாழன் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் அந்த பெண்ணுக்கே தெரியாமல் அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. சிறிது நேரத்தில் அவரது அருகில் இருந்த குழந்தை பசியால் பாலுக்கு அழுதுள்ளது. தன்னை பாம்பு கடித்து விட்டது என்பதை அறியாத அப்பெண் குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார்.
சிறிது நேரத்தில் தாய் மற்றும் குழநதை இருவரும் உயிருக்கு போராடவே, அவர்களை உறவினர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாய் உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலன்அளிக்காமல் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.
இச்சம்பவம் கிராமத்தார் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.