ஊதிய உயர்வு அளிக்க வலியுறுத்தி, வரும் 30, 31-ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுத் துறை வங்கிகளின் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், வங்கி அலுவலர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்தது. ஆனால், அந்தப் பரிந்துரையை வங்கி அலுவலர்கள் சங்கம் ஏற்கவில்லை. இதுகுறித்து வங்கிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இதற்கு முன், கடந்த நவம்பர் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரையிலான காலக்கட்டத்தில் 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, முத்ரா கடனுதவி திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வங்கி ஊழியர்கள் ஓய்வின்றி பணியாற்றியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கம் அளித்திருக்கும் பரிந்துரை போதுமானதாக இல்லை. எனவே, எங்களது கோரிக்கையை வலியுறுத்தி மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ள கோட்டை முன், வரும் 29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அதைத் தொடர்ந்து, 30, 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.