புதுதில்லி: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் செவ்வாயன்று 11 பேரும், புதனன்று இருவரும் என இதுவரை மொத்தம் 13 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆலையின் முதல் அலகை மூடுமாறு மாநில மாசுக் கட்டுபாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் வெள்ளியன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 உயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
எனவே ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அதுபற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டுமாறு அவர்களை கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான ஆணை முந்தைய மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.