ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பொது இடங்களிலும், மத வழிபாட்டுத் தலங்களிலும் பிச்சை எடுக்க தடை விதித்துள்ள மாநில அரசு, இதனை மீறி யாரும் பிச்சை எடுத்தால் அவர்களைக் கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
பிச்சை எடுப்பதை தடை செய்யும் ஜம்மு-காஷ்மீர் மாநிலச் சட்டம் 1960-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீநகர் நகர காவல் துறை துணை ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஸ்ரீநகரில் பிச்சை எடுப்பதையே தொழிலாளாகக் கொண்டு பலர் செயல்படுவதாகவும், அவர்கள் இதன் மூலம் பெருமளவில் பணம் சம்பாதித்து வருவதாகவும் கிடைத்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் பொது இடங்களிலும், வழிபாட்டு இடங்களிலும் பொதுமக்களுக்கு அவர்களால் தொல்லை ஏற்படுகிறது.
இதனால், மாநிலத்தில் ஏற்கெனவே பிச்சை எடுப்பதை தடை செய்து 1960-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஸ்ரீநகரில் முழுமையாக அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தங்களுடைய உடலில் உள்ள காயம், நோய், உடல் குறைபாடுகள் ஆகியவற்றை மக்களிடம் காட்டி பிச்சை எடுப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.