தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சுதந்திரமான விசாரணை: மனித உரிமை ஆணையம் முடிவெடுக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி வழக்குரைஞர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தேசிய மனித உரிமைகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சுதந்திரமான விசாரணை: மனித உரிமை ஆணையம் முடிவெடுக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி வழக்குரைஞர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) முடிவு செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறையீட்டை மனுதாரர் என்எச்ஆர்சியில் செவ்வாய்க்கிழமை (மே 29) முன்வைக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வழக்குரைஞர் ஏ. ராஜராஜன் தில்லி உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ராஜீவ் ஷக்தேர் அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரர் சார்பில் வழக்குரைஞர் சபரீஷ் ஆஜராகி, 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மே 23ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது' என்றார்.
அப்போது குறுகிட்ட நீதிபதி ராஜீவ் ஷக்தேர், அப்படியென்றால் என்ன பிரச்னை என வினவினார். இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் சபரீஷ், 'சுதந்திரமான விசாரணை நடைபெறவில்லையென்றால், காவல்துறையால் நிகழ்த்தப்பட்டுள்ள இத்தகைய கொடூர சம்பவத்தில் உண்மை வெளிவராது' என்றார். 
அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, 'தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதே, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ஏன் முறையிடக் கூடாது' என மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் சபரீஷ் வாதிடுகையில், 'துப்பாக்கிச் சூடு சம்பவத்தை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்ட நாளில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்' என்றார்.
இதையடுத்து, நீதிபதி ராஜீவ் ஷக்தேர் பிறப்பித்த உத்தரவு: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற வழக்குரைஞரின் முறையீடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். 
இந்த முறையீட்டை மனுதாரர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 29) முன்வைக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com