நிபா வைரஸ் எங்கிருந்து பரவியது? டெட் என்டில் மருத்துவ சோதனைகள்!

வௌவால் மற்றும் இதர விலங்குகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கேரளாவில் நிபா வைரஸ் விலங்குகள் மூலம் பரவவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
நிபா வைரஸ் எங்கிருந்து பரவியது? டெட் என்டில் மருத்துவ சோதனைகள்!


கோழிக்கோடு: வௌவால் மற்றும் இதர விலங்குகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கேரளாவில் நிபா வைரஸ் விலங்குகள் மூலம் பரவவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஒரு பக்கம் விலங்குகள் மூலம் நிபா வைரஸ் பரவவில்லை என்பது மகிழ்ச்சியை அளித்தாலும், அது எங்கிருந்து பரவுகிறது என்பதை அறிய முடியாமல், மருத்துவக் குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.

3 வௌவ்வால்கள், 4 ஆடுகள், 5 மாடுகள், 8 பன்றிகள் மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் எதிலும் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்பதே இறுதி அறிக்கைக் கூறும் செய்தி. இதனால், கூடுதலாக சில வௌவ்வால்களை நச்சுயிரியல் நிபுணர்கள் சேகரித்து சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் வாழும் விலங்குகளை மருத்துவ பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த விலங்கிடமும், நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

அதே சமயம், நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்கள் பயன்படுத்திய கிணற்றுத் தண்ணீரில் வௌவ்வால்களின் எச்சம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்தே வௌவ்வால்கள் மூலமாக நிபா வைரஸ் பரவுவதாகக் கூறப்பட்டது. 

ஆனால், வௌவ்வால்களிடம் நடந்த மருத்துவப் பரிசோதனையில், நிபா வைரஸுக்கான தடயங்கள் கிடைக்கப்பெறாதது மருத்துவக் குழுவினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வௌவ்வால்களே நிபா வைரஸை பரப்புவதாக எடுத்துக் கொண்டாலும், இந்த பாலூட்டிகளின் இனப்பெருக்கக் காலம் இந்த மாதத்தோடு முடிவடைவதால், நிபா வைரஸ் தாக்கமும் நிச்சயம் குறையும் என்று மருத்துவக் குழுவினர் கருதுகிறார்கள்.

டிசம்பர் முதல் மே மாதம் வரை வௌவ்வால்களின் இனப்பெருக்கக் காலம். இந்த சமயத்தில்தான் நிபா வைரஸ் மிக வீரியமாக பரவுகிறது. இந்த காலங்களில் வௌவ்வால்களின் சிறுநீர், மலம், இதர கழிவுகள் மூலமாக நிபா வைரஸ் வேகமாகப் பரவுவதாக நச்சுயிரியல் நிபுணர் மருத்துவர் கே.ஜே. ரீனா கூறுகிறார்.

நிபா வைரஸ் எங்கிருந்து பரவியிருக்கிறது என்ற காரணியை கண்டறிய முடியாத நிலை இருப்பதால், நிபா வைரஸ் குறித்து ஏராளமான சந்தேகங்களும் பரவி வருகிறது. அதாவது நிபா வைரஸ் பாதித்து முதலில் உயிரிழந்த மொஹம்மது சபித்-தின் பயண விவரங்களை பரிசோதிக்குமாறு மக்கள் கூறுகிறார்கள்.

அதாவது, மொஹம்மது சபித் மலேசியாவில் இருந்து சமீபத்தில்தான் நாடு திரும்பியதாகவும், மலேசியாவில்தான் முதன் முதலாக நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், நாடு திரும்பிய சில நாட்களில் சபித் நிபா வைரஸ் தாக்கி மரணம் அடைந்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

இந்த சாத்தியக் கூறுகளை சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மறுக்கிறார்கள். ஏன் என்றால், நிபா வைரஸ் தாக்கிய ஒரு நபரால் எழுந்து நடக்கக் கூட முடியாது. இந்த நிலையில் அவர் மலேசியாவில் இருந்து வந்திருக்கவே முடியாது. அதே சமயம், அவர் மலேசியாவில் இருந்து வரும் போதே நிபா வைரஸ் தாக்கியிருந்தால், அவரது பயணத்தின் போது, நிபா வைரஸ் மற்றவர்களுக்கும் அதிவேகமாகப் பரவியிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதால் மலேசியாவிலேயே அவருக்கு நிபா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்பதில் அடிப்படை உண்மை இல்லை என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com