மேற்கு வங்க மாநிலத்தில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் நரேந்திர மோடியை ஒரு நபர் அணுகியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பல அடுக்கு பாதுகாப்பு மீறப்பட்ட இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் கூறினர்.
மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில ஆளுநர் கே.என்.திரிபாதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், பட்டமளிப்பு விழா நிறைவடைந்த பிறகு பிரதமர் மோடி மேடையிலிருந்து புறப்படத் தயாரானார். அப்போது பாதுகாப்பு வளையத்தை மீறிய வகையில் ஒரு நபர் பிரதமர் மோடியை அணுகினார். அவர், தாம் வைத்திருந்த ரவீந்திரநாத் தாகூர் புகைப்படத்தை மோடிக்கு அளித்தார்.
அதை வாங்கிக் கொண்ட மோடி, அதை தனது பாதுகாவலர்களிடம் அளித்தார். உடனடியாக சிறப்பு பாதுகாப்பு குழுவினர் அந்த நபரை மேடையிலிருந்து அகற்றினர். அதையடுத்து மோடி அங்கிருந்து செல்ல, அவரைத் தொடர்ந்து ஷேக் ஹசீனாவும், மம்தா பானர்ஜியும் மேடையிலிருந்து இறங்கிச் சென்றனர்.
சம்பவம் குறித்து விஸ்வ பாரதி பல்கலைக்கழக துணை வேந்தர் சபுஜ்காலி சென் கூறுகையில், 'நான் மேடையில் இருந்தபோது அந்த நபர் அத்துமீறி பிரதமர் மோடியை அணுகினார். அந்த நபர் யார் என்று தெரியவில்லை' என்றார்.