பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதைக் கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளையும், சாதனை விளக்கக் கூட்டங்களையும் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, வரும் 27-ஆம் தேதி முதல் அத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பான அறிவிப்பை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்.பி.க்கள் ஆகியோர் சமூக பிரபலங்கள் 1 லட்சம் பேரிடம் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் விளக்கிக் கூற உள்ளனர்.
ஒவ்வொரு பாஜக பிரதிநிதிகளும் தலா 25 பிரபலங்களிடம் அத்தகைய தகவல்களை எடுத்துரைக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர்களிடம் பாஜக அரசின் சாதனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதைத் தவிர, கிராமப்புற அளவில் சாதனை விளக்கக் கூட்டங்களையும், பத்திரிகையாளர் சந்திப்புகளையும் நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவு இத்தகைய சுய பிரசார நடவடிக்கைகளை பாஜக முன்னெடுப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.