ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு தேச கட்சியின் வருடாந்திர மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு பேசியதாவது,
"பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லது என்று நினைத்து ஆதரித்தேன். ஆனால், மத்திய அரசால் வங்கிகள் திவாலாகின. வங்கிகளின் அமைப்பு முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இது போன்ற பண பற்றாக்குறையை இதுவரை பார்த்ததே இல்லை.
2019-இல் பிராந்தியக் கட்சிகள் தான் கிங்-மேக்கர்கள். அனைத்து பிராந்தியக் கட்சிகளும் பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்து செயல்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை ருசிக்கவுள்ளது.
ஆந்திரத்துக்கு இழைத்த அநீதியால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அச்சப்படுவதற்கு அவசியமில்லை. சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் ராமா ராவ்-இன் ஆன்மாவுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்" என்றார்.
இவர், கடந்த புதன்கிழமை கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி பதவியேற்பு விழாவில் எதிர்கட்சிகளின் பலத்தை காண்பிக்க ஒன்று கூடிய பல அரசியல் கட்சி தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்றிருந்தார்.