பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாக்பாத் பொதுக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று பேசினார். இதில் உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியாணா முதல்வர் எம்.எல்.கட்டர் ஆயோரும் கலந்துகொண்டனர்.
தில்லி-மீரட் இடையிலான ஸ்மார்ட் நெடுஞ்சாலையைத் திறந்து வைத்த பின்னர் நடந்த இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது அனைவருக்கும் பொதுவாக ஏற்படுத்துவதாகும். எனவே இதற்கு சாதி, மத, பொருளாதார பேதங்கள் கிடையாது. சுமார் 4 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் 2 செல்ஃபோன் தயாரிப்பு தொழிற்சாலைகள் தான் இருந்தன. ஆனால் தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 120 தொழிற்சாலைகளாக அவை பெருகியுள்ளன.
தலித்துகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக இந்த அரசு எந்த நலத்திட்டங்களை ஏற்படுத்தினாலும், அவற்றை எந்த காரணமும் இன்றி அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து
வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசில், குற்றவாளிகள் தானான முன்வந்து காவல்துறையில் சரணடைந்துவிடுகின்றனர். இங்குள்ள ஒவ்வொரு கரும்பு விவசாயிகளின் நன்மைக்காக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் உங்களது அனைத்து இன்னல்களும் சரிசெய்யப்படும் என்று உறுதியளிக்கிறேன். ஒரு குடும்பத்தை மட்டும் வழிபடுபவர்களுக்கு ஜனநாயகத்தை வழிபடத் தெரியாது என்றார்.