சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் நொய்டா மாணவி முதலிடம்: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பாடத் தேர்வில் நொய்டாவைச் சேர்ந்த மாணவி மேக்னா ஸ்ரீவஸ்தவா முதலாவதாக வந்துள்ளார்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் நொய்டா மாணவி முதலிடம்: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பாடத் தேர்வில் நொய்டாவைச் சேர்ந்த மாணவி மேக்னா ஸ்ரீவஸ்தவா முதலாவதாக வந்துள்ளார். இந்த ஆண்டு தேர்வில், மாணவர்களை (78.99 சதவீதம்) காட்டிலும் மாணவிகளே (88.31 சதவீதம்) அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில் நாடு தழுவிய அளவில் நொய்டாவை சேர்ந்த மாணவி மேக்னா ஸ்ரீவஸ்தவா, 99.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலாவதாக வந்தார். அவர் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நொய்டாவில் உள்ள ஸ்டெப் பை ஸ்டெப் பள்ளியில் அவர் படித்தார். ஆங்கிலத்தில் மட்டும் 100க்கு 99 மதிப்பெண்கள் எடுத்தார். உடலியல் (பிசியாலஜி), வரலாறு, புவியியல் (ஜியோகிரபி), பொருளாதாரம் ஆகிய 4 பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
 காஜியாபாத்தைச் சேர்ந்த அனுஷ்கா சந்த் 500-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து, 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஆங்கிலத்தில் 100க்கு 98 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். வரலாறு, பொருளாதாரம், அரசியல் வரலாறு, உடலியல் ஆகிய 4 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 3ஆவது இடத்தை 7 மாணவ-மாணவியர்கள் எடுத்துள்ளனர். அவர்கள் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 மண்டல அளவில் திருவனந்தபுரம் மண்டலம் 97.32 சதவீத தேர்ச்சி பெற்று, முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 93.87 சதவீத தேர்ச்சியுடன் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. தில்லி மண்டலம் 89 சதவீத தேர்ச்சியுடன் 3ஆவது இடத்தை பெற்றுள்ளது.
 12,737 மாணவர்கள் 95 சதவீதம் மற்றும் அதற்கு அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 72,599 மாணவர்கள் 90 சதவீதம் மற்றும் அதற்கு அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளி மாணவர்கள் தரப்பில், கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த விஜய் கணேஷ் 98.4 சதவீத மதிப்பெண்களுடன் முதலாவதாக வந்துள்ளார். டேராடூனைச் சேர்ந்த பூஜா குமாரி 97.8 சதவீத மதிப்பெண்களுடன் 2ஆவதாக வந்துள்ளார்.
 மாற்றுத் திறனாளி மாணவர்கள் 141 பேர் 90 சதவீதம் மற்றும் அதற்கு அதிக சதவீத மதிப்பெண்களை எடுத்துள்ளனர். 25 பேர், 95 சதவீதம் மற்றும் அதிக சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 வெளிநாட்டு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் நிகழாண்டில் 94.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 92.02 சதவீதமாக இருந்தது.
 ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 82.02 சதவீதமாக இருந்தது. அது நிகழாண்டில் 83.01 சதவீதமாக அதிகரித்துள்ளது. மாணவர்கள் 78.99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களை விட அதிகமாக மாணவிகள் 88.31 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 பிரகாஷ் ஜாவடேகர் பாராட்டு:
 இதனிடையே, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டுள்ள மாணவ-மாணவியருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
 நிகழாண்டுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.
 இதில் 11 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஏப்ரல் 25-ஆம் தேதி நடத்தப்பட்ட சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பாடத்துக்கு மட்டும் ஒரு மாதம் கழித்து மறுதேர்வு நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com