சுய விளம்பரம்தான் பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால சாதனை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு சனிக்கிழமையுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் மதிப்பெண் அளித்துள்ளார். அதில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
4 ஆண்டு கால அறிக்கை: விவசாயம்- தோல்வி(எஃப்), வெளியுறவுக் கொள்கை- தோல்வி, பெட்ரோல் விலை- தோல்வி, வேலைவாய்ப்பு உருவாக்குதல்- தோல்வி, சுய விளம்பரம் தேடுவது- மிக நன்று (ஏ+), மக்களை ஈர்க்க வாசகங்களை உருவாக்குவது- மிக நன்று. குறிப்பு: சிறந்த தகவல் தொடர்பாளர்; சிக்கலான பிரச்னைகளில் தீர்வு காண போராடுகிறார்; ஒரு விஷயத்தில் மிகக் குறுகிய நேரமே கவனம் செலுத்துகிறார் என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, "மத்திய பாஜக அரசின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சி முழுவதும் துரோகம், ஏமாற்றம், பழிவாங்கல், பொய் ஆகியவற்றால் நிரம்பியிருந்தது; பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், மோடியும் நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என்பதை மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர்'' என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.