பெங்களூரு: திங்களன்று தில்லியில் பிரதமர் மோடியை கர்நாடகா முதல்வர் குமாரசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார். இரண்டு கட்சிகளிடையே இலாகா ஒதுக்கீட்டில் தற்பொழுது இழுபறி நிலவி வருகிறது. இதனால் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திங்களன்று சந்தித்துப் பேசுகிறார்கள்.
இந்நிலையில் திங்களன்று தில்லியில் பிரதமர் மோடியை கர்நாடகா முதல்வர் குமாரசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை 11.30 மணிக்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது நான்காண்டு கால பாஜக ஆட்சிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். அத்துடன் கர்நாடக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு பற்றியும் பேச்சு நடத்துகிறார். தொடர்ந்து மத்திய எரி சக்தி துறை மந்திரி பியூஸ் கோயலை குமாரசாமி சந்திக்கிறார். கர்நாடக அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் நிலக்கரி கிடைக்க தேவையான ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த சந்திப்பு குறித்த தகவல்களை பெங்களூரில் முதல்வர் அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுலை சந்திக்கும் நிலையில் குமாரசாமி பிரதமர் மோடியை சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.