மே 1, 2016-ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் நோக்கமானது குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களிடம் பிரதமர் மோடி தனது பிரத்யேக ஆப் மூலம் இன்று (திங்கள்கிழமை) உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது,
"இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் இந்தியாவில் பல்வேறு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் இந்திய பெண்களின் சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி செல்கிறது. ஏழை, விளிம்பு நிலை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலை இந்த திட்டம் பலப்படுத்தியுள்ளது.
2014-ஆம் ஆண்டு வரை 13 கோடி மக்கள் தான் எரிவாயுவை இணைத்திருந்தனர். அதில், பெரும்பாலானோர் பணக்காரர்கள். கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி புதிய இணைப்புகள் ஏழைகளின் பயனுக்காக இணைக்கப்பட்டுள்ளது" என்றார்.