ஜெய்பூர்: ஜனாதிபதியை உள்ளே அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, ராஜஸ்தானில் கோவில் பூசாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ராஜஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்பொழுது புஷ்கர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பிரம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அவரது மனைவிக்கு மூட்டு வலி இருப்பதால், அவர்கள் இருவரும் கருவறைக்குள் நுழையாமல் கதவருகில் நின்று பிரார்த்தனை செய்தனர். ஆனால் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய விஷமிகள் சிலர், ஜனாதிபதி கோவில் கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் பரப்பினர்.
இந்நிலையில் ஜனாதிபதியை உள்ளே அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, குறிப்பிட்ட கோவில் பூசாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாயன்று அசோக் மேவால் என்பவர் பிரம்மன் கோவிலுக்கு பக்தர்களில் ஒருவராக வரிசையில் நின்று வந்துள்ளார். அவரது முறை வந்ததும் உள்ளே நுழைந்தவர், அங்கிருந்த பூசாரி மஹாதேவ்புரியினை தன் கையில் உள்ள ஆயுதத்தால் தாக்கியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட விடியோவானது சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகப் பரவி வருகிறது.
பின்னர் அங்கு வந்து சேர்ந்த போலீசார் குற்றவாளி அசோக் கை கைது செய்தனர். தன்னை ஒரு மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று போலீசார் விசாரணைக்குப் பிறகு தெரிவித்தனர். இந்த சம்பவமானது கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
விடியோ: