முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று (புதன்கிழமை) காலை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, அவரை ஜூன் 5-ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அவர் தற்போது மீண்டும் முன் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் அடுத்த மனு தாக்கல் செய்துள்ளார். இந்த முறை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குக்காக அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மே 31-ஆம் தேதிக்குள் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ப.சிதம்பரம் இந்த முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் சாதகமாக செயல்பட்டதாக அவர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார்.