ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்தவரிடம் இருந்து, குரங்கு பணத்தினை கொள்ளையடித்து சென்ற விநோதம் நிகழ்ந்துள்ளது. .
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள நை மண்டி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பன்சால். அங்கு கடை வைத்திருக்கும் சிறு வியாபாரி. அவர் இரு தினங்களுக்கு முன்பு தனது மகள் நான்சியுடன் உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்றார்.
வங்கியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து, பிளாஸ்டிக் பை ஒன்றில் வைத்து தனது மகள் நான்சியிடம் கொடுத்துள்ளார் விஜய் பன்ஸால். பின்னர் அங்கிருந்து இருவரும் படிகளில் நடந்தபடியே வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென சில குரங்குகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. அந்த குரங்குகள் அவர்களை தாக்க முயன்றன.
அதில் ஒரு குரங்கு நான்சி கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை சுற்றப்பட்ட பிளாஸ்டிக் பையை பறித்துக் கொண்டு ஓடியது. அந்த குரங்கை விரட்டியபடி விஜய் பன்சால் சென்றார். வங்கி ஊழியர்கள் சிலரும், அந்த பகுதி மக்களும் சேர்ந்து அவருக்கு உதவி செய்ய ஓடி வந்தனர்.
ஆனால் குரங்கு அருகில் இருந்த கட்டடத்தின் உச்சிக்கு தாவிச் சென்று அமர்ந்து கொண்டது. அனைவரும் அந்த குரங்கிடம் கெஞ்சினர். உணவுப் பொருள்களைக் கொடுத்து அது வைத்திருந்த பையினைக் கைப்பற்ற முயன்றனர்
ஆனால் அதே சமயம் பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்த குரங்கு, அதில் இருந்து ரூபாய் நோட்டுக்களை கிழித்தபடியே வீசி எறியத் துவங்கியது. இப்படியாக சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வீசி எறிந்த குரங்கு, பின்னர் மீண்டும் பணத்துடன் அங்கிருந்து ஓடித் தப்பியது.
வீசி எறியப்பட்ட ரூ.60 ஆயிரத்தினைக் கைப்பற்றிய விஜய் பன்சால், இழந்த ரூ 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பற்றி போலீஸில் புகார் கொடுக்கச் சென்றார். ஆனால் போலீசாரே இந்த சம்பவம் தொடர்பாக எந்த பிரிவின் கீழ் வழக்குத் தொடர்வது? யார் மீது வழக்குத் தொடுப்பது என குழம்பியுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விஜய் பன்சால் புகார் அளித்துள்ளார்.