சஹரன்பூர்: இஸ்லாமிய பெண்கள் நெய்ல் பாலிஷ் அணியக் கூடாது என்று தருல் உலும் தியோபந்த் என்னும் தெற்காசியாவின் மிகப்பெரிய மத அமைப்பு 'பத்வா' உத்தரவு விதித்துள்ளது.
தருல் உலும் தியோபந்த் என்பது தெற்காசியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய மத அமைப்பு ஆகும், இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான வழிகாட்டும் நடைமுறைகளை இந்த அமைப்பு அச்சமூக மக்களுக்கு அளித்து வருகிறது. அத்துடன் சமயங்களில் எதனைப் பின்பற்ற வேண்டும் அல்லது எதனைச் செய்யக் கூடாது என்பது குறித்தும் இந்த அமைப்பு 'பத்வா' என்னும் தடை உத்தரவு பிறப்பிப்பதும் உண்டு.
அந்த வகையில் முழங்கால் தெரியும் அளவிற்கு உடை அணிந்து கொண்டு ஆண்கள் விளையாடும் கால்பந்து விளையாட்டை, இஸ்லாமிய பெண்கள் பார்க்கக் கூடாது என்னும் உத்தரவை இந்த அமைப்பு இந்த ஆண்டு துவக்கத்தில் பிறப்பித்தது.
அதேபோல் இஸ்லாமிய பெண்கள் தங்கள் தலைமுடியினை கத்தரிக்கக் கூடாது என்றும், புருவத்தை திருத்தக்க கூடாது என்றும் கடந்த ஆண்டு இந்த அமைப்பு அறிவுரைகளை வழங்கியிருந்தது.
இந்நிலையில் இஸ்லாமிய பெண்கள் தொழுகையில் ஈடுபடும் போது நெய்ல் பாலிஷ் அணியக் கூடாது என்று தருல் உலும் தியோபந்த் தற்போது 'பத்வா' உத்தரவு விதித்துள்ளது.
இதுதொடர்பாக அவ்வமைப்பினைச் சேர்ந்த முஃப்தி இஸ்ரார் கௌரா என்னும் மதகுரு கூறியதாவது:
இஸ்லாமிய பெண்கள் நெய்ல் பாலிஷ் அணியக் கூடாது எனும் பத்வாவை தருல் உலும் தியோபந்த் பிறப்பிக்கிறது. ஏன் என்றால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானதும் தவறானதும் ஆகும். அதற்கு பதிலாக பெண்கள் மருதாணி அணிந்துகொள்ளலாம்.
பெண்கள் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் பெண்கள் தொழுகைக்கு முன்னதாக நெய்ல் பாலிஷ் அணிந்திருந்தால் முழுமையாக நீக்கி விட வேண்டும்.
ஏனென்றால் பெண்கள் அணிந்திருக்கும் நெய்ல் பாலிஷானது, தொழுகைக்கு முன்னால் பெண்கள் தங்கள் கைகளை 'வுஸு' புனித நீரால் கழுவும் போது, அவர்களது நகத்தினை முழுமையாகி சுத்தம் செய்ய விடாமல் தடுக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.