அகர்தலா: உழைப்பாளர் தினமான மே 1 -க்கான விடுமுறையை ரத்து செய்து திரிபுரா மாநில பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு, கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.
2019-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை திரிபுரா மாநில பாஜக அரசு சனிக்கிழமையன்று வெளியிட்டது. அதில் உழைப்பாளர் தினமான மே 1 -க்கான பொது விடுமுறை என்பது ரத்து செய்யப்பட்டு அது 'கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை' என்ற வகையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
இதுதொடர்பாக திரிபுரா மாநில சிஜடியு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுரா மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் ஆணையத்திடம் சிஜடியு சார்பில் புகார் செய்ய உள்ளதாக தெரிவிக்கிறது.
அதுபோல் திரிபுரா கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சங்கர் பிரசாத் தத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திரிபுராவின் முதல் இடது முன்னணி அரசானது 1978-ஆம் ஆண்டில் மே 1-ஆம் தேதியை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தது. ஆனால் தற்போதுள்ள பாஜக அரசானது எந்த காரணமும் இல்லாமல் அதை ரத்து செய்துள்ளது.
மே தினம் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் அன்று நடைபெறுவதை தடுக்கும் விதமாக இந்த அரசு எடுத்துள்ள முயற்சிக்கு எதிராக, சிஐடியு சார்பில் சர்வதேச தொழிலாளர் ஆணையத்திடம் முறையிட உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.