ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் தேவெகௌடா மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் தெரிவித்ததாவது,
"பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அரசமைப்புக்கு உட்பட்ட அமைப்புகளின் ஸ்திரத்தன்மையை தகர்க்கும் செயல்கள் உட்பட பல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை அகற்ற காங்கிரஸ் உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய பொறுப்பு உள்ளது.
2019-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியை அகற்ற பல்வேறு தலைவர்களை சந்தித்து அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான செயலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்துள்ளார். இதுதொடர்பான யுத்தியை மேற்கொள்வது தொடர்பாக அவர் என்னையும், குமாரசாமியையும் இன்று சந்தித்தார்" என்றார்.
சந்திரபாபு நாயுடு இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இதுதொடர்பாக அவர் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உட்பட பல தலைவர்களை சந்தித்துப் பேசினார்.