ஆதிவாசி இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கிய நகர்புற மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) சத்தீஸ்கரில் குற்றம்சாட்டினார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று முதன்முதலாக பிரசாரம் மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
"ஆதிவாசி மக்களை காங்கிரஸ் ஏன் கேலிக்குள்ளாக்குகிறது என்று எனக்கு தெரியவில்லை. முன்பு ஒருமுறை பிரசாரம் மேற்கொள்ள வடகிழக்கு இந்தியாவுக்கு சென்றிருந்தேன். அப்போது, ஆதிவாசி மக்களின் பாரம்பரிய உடையை அணிந்தேன். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் அதனை கேலி செய்தனர். இது ஆதிவாசி கலாச்சாரத்துக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும்.
நகர்புற மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் நேரத்தில், நக்ஸலுக்கு எதிராக பேசும் சமயத்தில் காங்கிரஸ் ஏன் அவர்களை ஆதரிக்கிறது?
இதுபோன்ற மக்களை நீங்கள் மன்னிப்பீர்களா? இவர்கள் சத்தீஸ்கரில் வெற்றி பெறமாட்டார்கள். பாஸ்தர் பகுதியில் பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற உறுதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வேறு யாரேனும் வெற்றி பெற்றால், அது பாஸ்தர் கனவுகளுக்கு ஏற்பட்ட இழுக்காகும்.
நான் இங்கு வெறும் கையுடன் வரவில்லை. உங்களுக்காக சில வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்துள்ளேன். இந்தப் பகுதியில் இருந்து வறுமை, பசி மற்றும் வேலையின்மை உள்ளிட்டவற்றை ஒழிக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். முன்பு அதற்கான வளங்கள் இருந்தது. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
சத்தீஸ்கருக்கு தற்போது 18 வயது. இந்த 18 வயதில் அதற்கு பல்வேறு கனவுகள் உள்ளது. அந்த கனவுகளை நிறைவேற்றாமல் நான் ஓயமாட்டேன்.
முந்தைய அரசு வளர்ச்சிப் பணிகளை தடுத்தது. எங்களுடைய அரசு அனைவருக்குமான வளர்ச்சியை நோக்கி வேலை செய்கிறது. உங்களுக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அரசு வேண்டுமா அல்லது வளர்ச்சிப் பணிகளை தடுத்து நிறுத்தும் அரசு வேண்டுமா?" என்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.