உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் நியாயமற்றவை: கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் நியாயமற்றவை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் நியாயமற்றவை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த முயலும் கேரள அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதையடுத்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைக்காக முதல் முறையாக கடந்த மாதம் 17-ஆம் தேதி திறக்கப்பட்டது.
 அப்போது, ஐயப்ப பக்தர்களின் போராட்டம் காரணமாக, கோயிலுக்கு வந்த பெண் பத்திரிகையாளர்கள், பெண்ணிய ஆர்வலர்கள் என 10 முதல் 50 வரையிலான பெண்கள் 12 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
 பெண்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பம்பை, நிலக்கல், சந்நிதானம் ஆகிய இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதாக, இதுவரை 3,500 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, 540 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 100 பேர், இன்னமும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 இதனிடையே, நீதிமன்ற காவலில் உள்ள கொச்சியைச் சேர்ந்த கோவிந்த் மதுசூதனன் என்பவர் ஜாமீன் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு, நீதிபதி சுனில் தாமஸ் முன் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
 சபரிமலையில் பெண்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றதால், பக்தர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபடுவது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படுவதாகும். எனவே, சபரிமலை போராட்டங்களை நியாயப்படுத்த முடியாது.
 இந்த ஜாமீன் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால், அது தவறான முன்னுதாரணமாகி விடும். இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும். எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 இதனிடையே, சித்திரை ஆட்ட விஷேச விழாவுக்காக, பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை நடை கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்டது. அன்றைய தினமும், போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்கள், சபரிமலைக்கு வந்த 3 பெண்களை தடுத்து நிறுத்தினார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com