தீபாவளி பண்டிகையையொட்டி ஊக்கத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்று கூறி, ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு பிரிவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்நிறுவனத்தின் விமானங்கள் சில மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் "ஏஐஏடிஎஸ்எல்' பணியாளர்கள் மும்பை விமான நிலையத்தில் புதன்கிழமை நள்ளிரவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தீபாவளி ஊக்கத் தொகை இன்னமும் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். வியாழக்கிழமை அதிகாலை வரை போராட்டம் நீடித்தது. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 10 உள்நாட்டு விமானங்களும், 3 சர்வதேச விமானங்களும் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
"ஏஐஏடிஎஸ்எல்' பிரிவில் நாடு முழுவதும் 5,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் ஒப்பந்த பணியாளர்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஏர் இந்தியா நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.