கான்கேர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இரண்டு நாள் பிரசாரத்தை இன்று துவக்கினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்.
கான்கேர் மாவட்டம் பகன்ஜோர் நகரில் பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்றிருந்த தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்குத் தப்பியோட அனுமதித்ததையும் ஒரு சேர தாக்கியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நீங்கள் அனைவரும் உங்கள் கையில் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு வங்கி வாசல்களில் நீண்டு இருந்த வரிசையில் காத்திருந்த போது, அங்கே கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் யாரையுமே பார்க்க முடியவில்லை. அதே சமயத்தில் நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் உங்கள் பணத்தை வங்கிகளிடம் இருந்து கடனாக வங்கிக் கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிக் கொண்டிருந்தனர் என்று ராகுல் மத்திய அரசைக் கடுமையாக சாடியுள்ளார்.
நேற்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளாக இருந்த நிலையில், ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர்களின் விவகாரத்தையும் ஒரு சேர கையில் எடுத்துள்ளார்.