புது தில்லி: பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான தீர்ப்பு விவகாரத்தில், மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க உச்ச நீதிமன்றம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில், தீபாவளிப் பண்டிகையன்று இரவு 8 முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இரண்டு மணி நேரம் போதாது என்பதால், கூடுதலாக இரண்டு மணி நேரத்தை தமிழக அரசு கோரியது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இரண்டு மணி நேரத்தை தமிழக அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியது.
ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 2100 - க்கும் மேற்ப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான தீர்ப்பு விவகாரத்தில், மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க உச்ச நீதிமன்றம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
குறிப்பாக உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உச்ச நீதிமன்றம் அனுமதித்த நேரத்தையும் மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
சுபாஷ் தத்தா என்பவர் இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 12-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல வெளியாகியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட மாநிலங்களில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த நேரத்தையும் மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது; எனவே இந்த மாநிலங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் ரிக்கை வைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
எனவே நீதிமன்ற உத்தரவை சரியாக செயல்படுத்தாத மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க உச்ச நீதிமன்றம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது