மக்களவையின் முதல் பெண் செயலராக பதவி வகித்து வரும் சினேகலதா ஸ்ரீவஸ்தவாவின் பதவிக் காலத்தை மேலும் ஓர் ஆண்டு நீட்டித்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சினேகலதா ஸ்ரீவஸ்தவா கடந்த 1982ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு அமைச்சரவை செயலராக பொறுப்பேற்ற அவர் வரும் நவ. 30ம் தேதியுடன் பணி நிறைவு பெறுகிறார்.
இதுதொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சினேகலதா ஸ்ரீவஸ்தவாவின் பதவிக்காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து மக்களவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 1ஆம் தேதி 2018 முதல் நவம்பர் 30ஆம் தேதி 2019ஆம் ஆண்டு வரை மக்களவை செயலர் பதவியில் அவர் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு துறைகளின் பொறுப்புகளை நிர்வகித்து அனுபவம் வாய்ந்த இவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலும், மத்திய அரசிலும் பணியில் இருந்த போது திறம்பட பணியாற்றியுள்ளார்.
மத்திய நீதி மற்றும் சட்டத்துறையின் செயலராகவும், நிதித்துறையின் தனி மற்றும் கூடுதல் செயலராகவும் ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.
முன்னதாக, மத்தியப் பிரதேச அரசின் பல்வேறு துறைகளின் முக்கியப் பொறுப்பிலும், கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறையின் தலைமை செயலராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.