சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவையொட்டி, துணை ராணுவப் 
சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

சத்தீஸ்கர் சட்டப் பேரவை தேர்தலில் முதல்கட்டமாக, நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 18 தொகுதிகளில் இன்று காலை  7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவையொட்டி, துணை ராணுவப் படையினர், மாநில காவல்துறையினர் என 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

சத்தீஸ்கரில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசின் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைவதையொட்டி, அந்த மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளுக்கு நவம்பர் 12-ஆம் தேதியும், மீதமுள்ள 72 இடங்களுக்கு நவம்பர் 20-ஆம் தேதியும் தேர்தல் நடத்தப்படும்; வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதன்படி, கைராகர், டோங்கர்கர் (எஸ்சி), ராஜ்நந்த்கான், டோங்கர்கான், குஜ்ஜி, மோஹ்லா-மான்பூர் (எஸ்டி), அண்டாகர் (எஸ்டி), பானுபிரதாப்பூர் (எஸ்டி), கங்கேர் (எஸ்டி), கேஷ்கால் (எஸ்டி), கோண்டாகான் (எஸ்டி), நாராயண்பூர் (எஸ்டி), பஸ்தர் (எஸ்டி), ஜக்தால்பூர், சித்ரகோட் (எஸ்டி), தண்டேவாடா (எஸ்டி), பிஜாப்பூர் (எஸ்டி), கோண்டா (எஸ்டி) ஆகிய 18 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மோஹ்லா-மான்பூர், அண்டாகர், பானுபிரதாப்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் உள்பட 10 தொகுதிகளில் இன்று காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கி பிற்பகல் 3 மணி வரையும், ராஜ்நந்த்கான் உள்ளிட்ட 8 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 5 மணி வரையும் நடைபெறகிறது.

இன்று நடைபெற்று வரும் முதல்கட்ட வாக்குப்பதிவில் 16,21,839 ஆண்கள், 15,57,592 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 89 பேர் என மொத்தம் 31,79,520 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக 4,336 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. 

தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 18 தொகுதிகளில் 12 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக தோல்விகண்டது. எனவே, இத்தொகுதிகள் பாஜகவுக்கு சவாலானதாக கருதப்படுகிறது.

முதல்கட்ட தேர்தலில் முதல்வர் ரமண் சிங் (ராஜ்நந்த்கான் தொகுதி), மாநில அமைச்சர்கள் கேதார் காஷ்யப் (நாராயண்பூர்), மகேஷ் காக்டா (பிஜாப்பூர் தனித்தொகுதி) உள்பட 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராஜ்நந்த்கான் தொகுதியில் ரமண் சிங்கை எதிர்த்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினர் கருணா சுக்லா காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். 

நக்ஸல் அச்சுறுத்தல் காரணமாக, 18 தொகுதிகளிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்திய-திபெத் எல்லை காவல் படை உள்பட 650 கம்பெனி துணை ராணுவப் படையினர், மாநில படையினர் என மொத்தம் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நக்ஸல்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக, ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. நக்ஸல்களின் அச்சுறுத்தலை முறியடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com