பெங்களூரு: மத்திய அமைச்சர் அனந்தகுமார் (59) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்
பாஜக சார்பாக, பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அனந்தகுமார். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வந்த அவர், சுமார் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆட்சியில் ரசாயனத் துறை உரத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்து வந்தார்.
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அனந்தகுமார், கடந்த 2 மாதங்களுக்கு முன் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் கிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தலைவர்கள் இரங்கல்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், சுரேஷ் பிரபு, சதானந்தா கவுடா, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.