பலோடா பஜார் (சத்தீஸ்கர்): நாடு மக்களால் நடத்தப்படுகிறது என்பதைக் கூட அறியாதவர் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சத்தீஷ்கரில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பலோடா பஜார் பகுதியில் நடந்த தேர்தல பேரணியில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது:
தான் பிரதமரான 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னரே நாட்டின் வளர்ச்சி தொடங்கியது என மோடி அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் மக்களால் மட்டுமே நாடு நடத்தப்படுகிறது; ஒரு தனி மனிதரால் அல்ல என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. இதுபோன்ற தகவல்களின் மூலம் அவர் உங்களை புண்படுத்தி வருகிறார்.
மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கிய பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. அமலாக்கம் ஆகியவற்றால் சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர் முற்றாக முடங்கினர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியானது இளைஞர்கள் வர்த்தகம் செய்ய, வங்கிகளில் இருந்து கடன் பெறுவதை ஊக்குவிக்கும்.
சத்தீஸ்கரின் வேளாண்மை கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதையே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.