புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமார், சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை மரணமடைந்தார்.
அனந்த்குமாரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, அனைத்துக் கட்சி தலைவர்கள், பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் செவ்வாய்க்கிழமை அரசு மரியாதையுடன் தகனம்
செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக எச்.என்.அனந்த்குமார் (59) செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், ரசாயனம் மற்றும் உரத்துறை, மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கௌடாவுக்கும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூடுதலாக ஒதுக்கீடு செய்து செவ்வாய்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது.