புது தில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்குமாறு அளித்த தீர்ப்புக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் மறுத்துவிட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்குமாறு அளித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி வலியுறுத்திய வழக்குரைஞரிடம், ஜனவரி 22ம் தேதி வரை காத்திருக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறியது.
சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு ஜனவரி 22ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதே சமயம், பெண்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதேக் கோரிக்கையை தேசிய ஐயப்ப பக்தைகள் சங்கம் சார்பில் வழக்குரைஞர் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்ததைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.