நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் புகழை மத்தியில் ஆளும் தற்போதைய அரசு சிறுமைப்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். ஜனநாயகத்தை பாதுகாப்பதன் மூலம் நேருவுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேரு-தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தின் மறு வெளியீட்டு விழா தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சோனியா காந்தி பங்கேற்று பேசியதாவது:
ஜனநாயகத்தை வலுப்படுத்தியதிலும், ஆட்சி அமைப்பை கட்டமைத்ததிலும் நேருவின் பங்கு அளப்பரியது. அதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும். தேசத்தை கட்டமைத்ததில் நேரு ஆற்றிய பங்களிப்பை சசி தரூர் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
மத்தியில் ஆளும் தற்போதைய அரசு நேருவின் புகழை சிறுமைப்படுத்தி வருகிறது. ஜனநாயகத்தை பாதுகாப்பதன் மூலம் நேருவுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.