தில்லியில் அமைந்துள்ளது போல் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கென தலைமை அலுவலகம் அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுவரும் மத்திய அரசு மண்டல அலுவலகங்களிடம் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய பொதுப் பணித் துறை சில தகவல்களை கோரியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு மண்டல அலுவலகங்களிடம் இருந்து தகவல் கிடைத்த பிறகு, தலைமை அலுவலகம் அமைப்பதற்கான செலவு உள்ளிட்டவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படும்.
பல்வேறு துறைகளை உள்ளடக்கிய தலைமைச் செயலகத்தை மாநில அரசுகள் கொண்டிருக்கின்றன. ஆனால், பல்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கும் மத்திய அரசு அலுவலகங்களுக்கென அந்தந்த மாநிலங்களில் தலைமை அலுவலகம் இல்லை. இந்த அலுவலகம் மூலம் துறைகளுக்கு இடையே தகவல்கள் வேகமாகப் பரிமாறிக் கொள்ள முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். மத்திய பொதுப் பணித் துறை, மத்திய அரசு அலுவலகங்களை அமைப்பது, அவற்றை பராமரிப்பது, சர்வதேச எல்லைகளில் வேலிகளை அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.