திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியடைந்த நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலையில் ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது.
அதேவேளையில், அந்த மனுக்கள் ஜனவரி 22-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த சில தினங்களில் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இந்தச் சூழலில், சபரிமலை விவகாரம் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக வியாழன் அன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கேரள அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் , பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கலந்து கொண்டன.
இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.அத்துடன் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.