ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியானதன் மூலம், அந்த ஒப்பந்தம் தொடர்பான மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசிடம் உத்தரவாதம் பெறப்படவில்லை என்று மனுதாரர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பிரான்ஸ் அரசிடம் உத்தரவாதம் பெறப்படவில்லை என்றாலும், அதற்கு இணையான உறுதிமொழி கடிதம் பெறப்பட்டுள்ளது என்றார்.
இதை விமர்சித்து ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை. இந்தப் புதிய தகவல் மூலம், அந்த ஒப்பந்தம் தொடர்பான மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரான்ஸ் அரசு அளித்த ஒரு கடிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு, ரஃபேல் ஒப்பந்தத்தை இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் என்று எப்படிக் கூற முடியும்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே கேள்வியை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலாவும் எழுப்பியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் மோடி தனது நண்பர்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக, நாட்டு நலனுக்கு வேண்டுமென்றே ஊறு விளைவித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய ஊழலான இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ரண்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார்.