கொல்கத்தா: கடந்த 7 ஆண்டுகளில் மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 96 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
உலக குறைபிரசவ தினத்தையொட்டி, இன்று மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது, கர்ப்பிணி பெண்களின் நலனுக்காக எனது அரசு கடுமையாக பணியாற்றி வருவதாக கூறினார்.
இதுகுறித்து அவரது தனது டுவிட்டர் பக்க பதிவில், இன்று உலக குறைபிரசவ தினம். கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களின் நலனுக்காக மாநில அரசு அயராது உழைத்து வருகிறது.
நகரங்களில் இருந்து தொலைதூரத்தில் அமைந்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்காக எங்களுடைய அரசு காத்திருப்பு மையங்களை அமைத்துள்ளோம். கடந்த 7 ஆண்டுகளில், மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 65 சதவீதத்தில் இருந்து 96 சதவீதம் ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அவர்களின் குடும்பத்தினை கவனத்தில் கொள்ளும் விதமாக உலக குறைபிரசவ தினத்தை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.