கான்பூர்: சக பேராசிரியர் மீது ஜாதிய வன்மத்துடன் நடந்து கொள்வதாக, கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் நால்வர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
கான்பூர் ஐஐடியின் ஏரோஸ்பேஸ் பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுப்பிரமண்யம் சதேர்லா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் கான்பூர் ஐஐடியின் முன்னாள் மாணவரும் கூட. இவர் தன்னுடன் பணியாற்றும் சக பேராசிரியர்களான இஷான் ஷர்மா, சஞ்சய் மிட்டல், ராஜிவ் ஷேகர் மற்றும் சி.எஸ்.உபாத்யாய ஆகிய நால்வரும் தான் மீது ஜாதிய வன்மத்துடன் செயல்படுவதாக புகார் கூறியுள்ள சம்பவம் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.
அவர் தனது புகாரில் குறிப்பிட்ட நால்வரும் மற்றும் வேறு சிலரும், 'தான் இட ஒதுக்கீட்டின் கீழ் பணிக்கு வந்துள்ளதாகவும், தனக்கு கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறமை இல்லையென்றும்' கல்லூரியில் தன்னைப் பற்றி புரளிகளைப் பரப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது புகார் தொடர்பாக கான்பூர் ஐஐடி இயக்குநரும், ஏரோஸ்பேஸ் பிரிவின் தலைவருமான ஏ.கே.கோஷுக்கு கடுமையான வார்த்தைகளில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்று ஐஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் சுப்பிரமண்யம் சதேர்லா காவல்துறையில் அளித்துள்ள புகாரின் பேரில், குறிப்பிட்ட நானகு பேராசிரியர்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என ஐந்து பேர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கான்பூர் மேற்கு காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் தெரிவித்துள்ளார்.