மெஹ்பூப்நகர்: காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வை எழுத வந்த பெண்ணின் கைக் குழந்தையை, பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த தலைமைக் காவலர் பார்த்துக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெலங்கானாவின் மெஹ்பூப் நகரில் உள்ள பாய்ஸ் ஜூனியர் கல்லூரியில் கடந்த ஞாயிறன்று காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட கல்லூரிக்கு வந்த தலைமைக் காவலர் முஜீப்-உர்-ரெஹ்மானுக்கு கூடுதலாக ஒரு பணி சேர்ந்து கொண்டது. அது என்னவென்றால், தேர்வெழுத கைக் குழந்தையோடு வந்த பெண் தேர்வெழுதி முடிக்கும் வரை அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்புதான் அது.
குழந்தையை பெற்றுக் கொண்ட ரெஹ்மான், அதனை பாசத்தோடும், பரிவோடும் பார்த்துக் கொண்டதும், அதன் அழுகையை நிறுத்த முயற்சித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.