ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்த பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பான விலை மற்றும் கூடுதல் தகவல்களை வெளியிடமாட்டோம் என்று பாஜக தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள், காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் பாஜக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வழக்கறிஞர் வினீத் தன்டா என்பவர் தொடர்ந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை ஏற்றுக்கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்கே கௌல் மற்றும் நீதிபதி கேஎம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தெரிவித்தது. இதன்மூலம், இந்த வழக்கு வரும் 10-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.