அஜ்மீர்: ராஜஸ்தான் மாநில முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா படம் மீது மாநில அமைச்சர் ஒருவர் திறந்தவெளியில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குளாகி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளார். இவரது அமைச்சரவையில் ஷம்பு சிங் கேதாசர் என்பவர் இடம்பெற்றிருக்கிறார். இவர் ராஜஸ்தான் மாநில விதைகள் கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
ஞாயிறன்று அஜ்மீரில் பாஜக பேரணி ஒன்று நடந்தது. பேரணி நடந்த பகுதிக்கு பின்புறம் சென்ற அமைச்சர் ஷம்பு சிங் கேதாசர், அங்கு கிடந்த முதல்வர் வசுந்தரா ராஜேவின் பதாகை மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைச் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் திறந்த வெளிக்கழிப்பிடம் ஒழிக்கப்பட்ட பகுதியாக ஸ்வச் பாரத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஷம்பு சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:
திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது என்பது நமது பழங்காலப் பழக்கம். நான் முதல்வர் பதாகை மீது சிறுநீர் கழிக்கவில்லை, சிறிது தொலைவு தள்ளித்தான் சிறுநீர் கழித்தேன். அந்தப் பகுதியில் சிறுநீர் கழிப்பதற்கான இடம் ஏதும் இல்லை. அதன் காரணமாகவே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இயற்கை உபாதையை என்ன செய்ய முடியும். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் அவ்வாறு செய்தால் சுகாதாரக்கேடு உருவாகும்.
இவ்வாறு அமைச்சர் ஷம்பு சிங் தெரிவித்தார்.