4-ஆவது தொழில் புரட்சி வேலைகளின் தன்மைகளை மாற்றி கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக 4-ஆவது தொழில் புரட்சி மையத்தின் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பேசியதாவது,
"4-ஆவது தொழில் புரட்சியின் நன்மைகளை அறுவடை செய்ய கொள்கை மாற்றங்களுக்கு அரசு தயாராக உள்ளது. நமது பன்முகத்தன்மை, மக்கள் வளம், வேகமாக வளர்ந்து வரும் சந்தை, டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் போன்றவை ஆய்வுகள் மேற்கொண்டு, அதனை அமல்படுத்துவதற்கான சர்வதேச மையமாக இந்தியாவை உருவாக்கும்.
4-ஆவது தொழில் புரட்சியில் இந்தியாவின் பங்கு ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும். முதலிரண்டு தொழில் புரட்சியின் போது இந்தியா சுதந்திரம் அடையவில்லை. 3-ஆவது தொழில்புரட்சி வந்தபோது, இந்தியா சுதந்திரம் அடைந்த சவால்களை எதிர்கொண்டு இருந்தது.
செயற்கை அறிவுத்திறன், கருவிகள் குறித்த கல்வி, இணையதளம் உள்ளிட்ட ஆற்றல் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்.
சுமார் 50 கோடி இந்தியர்களிடம் மொபைல் போன்கள் உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவில் இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் குறைந்த விலையில். மொபைலில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 30 மடங்காக அதிகரித்துள்ளது.
120 கோடி இந்தியர்களுக்கும் மேலானவர்களிடம் ஆதார் உள்ளது. 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிக் ஃபைபர் இணைக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ளது. 2014-இல் 59 பஞ்சாயத்துகளில் தான் ஆப்டிக் ஃபைபர் இணைக்கப்பட்டிருந்தது. தற்போது 1 லட்சம் கிராமங்களில் ஆப்டிக் ஃபைபர் இணைக்கப்பட்டுள்ளது" என்றார்.