உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அடுத்து சபரிமலைக்கு பெண்கள் வந்தால், அவர்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்று எச்சரிக்கும் விதமாக பேசிய மலையாள நடிகர் மீது போலீஸார் இன்று (சனிக்கிழமை) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்காக பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரள மாநிலம் கொல்லம், அருகேயுள்ள சவரா என்னும் இடத்தில், 'சபரிமல விஸ்வாஸ சமரேக்ஷனா ஜதா' என்னும் அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை பேரணி ஒன்று நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தலைமை வகித்தார். இதில் பிரபல மலையாள வில்லன் நடிகரான 'கொல்லம்' துளசியும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் 'கொல்லம்' துளசி பேசியதாவது:
"சபரிமலை தொடர்பாக நமது நமபிக்கைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய அந்த நான்கு நீதிபதிகளும் முட்டாள்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அடுத்து சபரிமலைக்கு பெண்கள் வந்தால், அவர்கள் இரண்டாக வெட்டப்பட வேண்டும். ஒரு துண்டு தில்லிக்கும், மற்றொரு துண்டு கேரளா மாநில முதல்வருக்கும் அனுப்பப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்றத்த தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய வயதான பெண்கள் அனைவரும் சபரிமலைக்குப் போகலாம். வேறு யாராவது வர முயன்றால் அவர்கள் வெட்டப்பட வேண்டும்" என்றார்.
இவர் வன்முறையை தூண்டும் வகையில் இப்படி பேசியது அதிர்ச்சியையைும், சர்ச்சையையும் கிளப்பியது.
இதையடுத்து, கேரள போலீஸார் அவர் மீது இன்று (சனிக்கிழமை) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.